இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஆஸ்திரேலியா

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது.தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச பயணங்கள் படிப்படியாக இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகின்றன. எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே பெரும்பாலான நாடுகள் அனுமதித்து வருகின்றன.ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இந்திய மாணவர்கள், இனி எந்தச் சிக்கலும் இன்றி செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.சீனாவால் தயாரிக்கப்பட்ட சினோவாக் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனினும், இந்திய மாணவர்கள் உடனே ஆஸ்திரேலியா திரும்ப முடியுமா என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *