அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்துப் பேசுகின்றனர்- வெள்ளை மாளிகை

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்ர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவுசெய்யப்பட்டது.அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்துப் பேசுகின்றனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. இப்பேச்சுவார்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *