தமிழக அரசியலில் மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி சென்னை தி நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்தபடி உள்ளார் ஆர்.எம். வீரப்பன். இந்த நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு ஆர்எம் வீரப்பன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் அவர் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் எம்ஜிஆர் என்றைக்கும் தனது அரசியலை பணம் சம்பாதிப்பதற்கு பயன்படுத்தவில்லை.
அவர் 70 வருடங்கள் வாழ்ந்தார். நான் அவரோடு 35 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளேன். எம்ஜிஆர் நாடக மன்றம் அமைப்பின் மேலாளராக எனது முதல் சம்பளம் 60 ரூபாய். 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆரோடு இணைந்து தயாரித்துள்ளேன். 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாள் தேர்தல் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவ்வாறு முதலமைச்சர் பதவிக்கு நீங்கள் போட்டி போட வேண்டாம் என்று நான் அவரை கேட்டுக்கொண்டேன். ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மாள் ஆகிய இருவரும் அதிமுக தலைமைக்காக போட்டிப் போட்டால் எம்ஜிஆர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.நான் ஜானகி அம்மாள் ஆதரவாளராக இருந்த போதிலும் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக இருந்த போது என்னை அவரது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இதன் பின்னணியில் இருந்தது சசிகலாவின் கணவர் நடராஜன் . அவர் தான் அதிமுகவில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து கொண்டு சென்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறி அவரை சம்மதிக்க வைத்தார். கட்சியின் நலனுக்காக நானும் அதற்கு சம்மதித்தேன்.ஆனால் 1995ம் ஆண்டு என்னை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதா அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது அதில் நானும் பங்கேற்றேன் என்பதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எம்ஜிஆர் தூவிய விதையின் காரணமாக தான் கடைசி சட்டசபை தேர்தலில் அதிமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .பணத்தை வைத்து ஜெயலலிதா கட்சியை நடத்தினார். ஆனால் தற்போதைய தலைவர்கள் அதையும் செய்ய முடியாது. அதிமுக இனியும் தேர்தல்களில் வெல்ல முடியாது. காங்கிரஸ் செய்த தவறுகளால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா தலைமையிலான திமுக போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வலுவான திமுகவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் புதிதாக ஒரு எதிர் கட்சி வலுப்பெற்றால் தான் உண்டு. ஆனால் இப்போதைக்கு அது போன்ற எந்த ஒரு சூழ்நிலையில் இல்லை. இவ்வாறு ஆர்எம் வீரப்பன் தெரிவித்துள்ளார்.